சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவ மனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மதன்குமார் நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.
ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்திய டாக்டர்கள் குழுவில் இடம்பெற்ற முக்கிய டாக்டர்களில் இவரும் ஒருவர் ஆவார். ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தியதில் இருந்து அதை அகற்றும் வரை ஜெயலலிதாவுடன் இவர் இருந்துள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில், எக்மோ கருவி பொருத்திய பின்பு பல மணி நேரம் ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்தோம். இருந்தபோதிலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் டிசம்பர் 5-ந் தேதி இரவு எக்மோ கருவியை அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று கூறி உள்ளார்.
ஜெயலலிதாவுக்கு இதயம், நுரையீரலை மாற்றும் திட்டம் எதுவும் இருந்ததா? என்று விசாரணையின் போது நீதிபதி ஆறுமுகசாமி, டாக்டர் மதன்குமாரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை என்று பதில் அளித்துள்ளார்.
மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.