சென்னை,
தமிழ்நாடு, புதுவை, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, இந்த மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதனால், தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்காளம், அசாமில் பல்வேறு கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். வரும் சட்டசபை தேர்தலிலும் இதே முறை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கு மேல் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும். இது நடைமுறைக்கு வந்ததும், அரசுப் பணிகளில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவது மற்றும் அரசு இயந்திரத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது தடை செய்யப்படும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தேர்தலைச் சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் விரிவான திட்டங்களை வகுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு தலைமை அதிகாரி, மூன்று வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் என ஒரு குழு செயல்படும். மாநிலம் தழுவிய அளவில் சுமார் 3,45,160 பணியாளர்கள் தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.