தமிழக செய்திகள்

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப பரிசீலிக்கப்படும்- சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவு, கவர்னரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் பேரவைத் தலைவர் அப்பாவு, கவர்னரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழக கவனர் பன்வாரிலால் புரோஹித்தை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து, மரப்புப்படி சபையில் உரையாற்ற அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்புக்கு பின்செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 'சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்ற கவர்னருக்கு முறையாக அழைப்பு விடுப்பது மரபு. அதன்படி, கவர்னரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன்.

அவரும் கண்டிப்பாக வருவதாகக் கூறியிருக்கிறார். கூட்டத்தொடரில் ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பில்லாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படும். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப பரிசீலிக்கப்படும். நீட் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு வரும். சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்றார்.