சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த டி.டி.வி.தினகரன், தற்போது அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட எப்போதும் நட்பாக இருந்தவர்கள் கிடையாது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தவர்தான். அவர் தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கட்சிகள் கூட்டணி மாறுவது குறித்து செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “கட்சிகள் கூட்டணி மாறுவதும், முதலில் பேசியதற்கு மாறாக விமர்சனம் செய்வதும் ஜனநாயகத்தில் சகஜமான ஒன்றுதான். அதனால் அரசியல் கட்சிகள் மாறி மாறி கருத்துகளை பேசிக்கொள்கிறார்கள். நாங்கள் இதில் யாரையும் விமர்சிப்பது இல்லை” என்று தெரிவித்தார்.