முத்தலாக் தடை மசேதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது.
முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தில் அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசும்பொழுது, முத்தலாக் சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும். முத்தலாக் சட்ட மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என கூறினார்.
அ.தி.மு.க.வின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர். மாநிலங்களவையில் அ.தி.மு.க.வுக்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட திருத்த மசேதா மீதான வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. இந்த மசோதாவுக்கு 99 பேர் ஆதரவும், 84 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனை அடுத்து முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது.
இதுபற்றி அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறும்பொழுது, முத்தலாக் மசோதா குறித்து மக்களவையில் ரவீந்திரநாத் குமார் பேசியது எனக்கு தெரியாது. வேலூர் தேர்தலுக்காக முத்தலாக் மசோதாவை எதிர்த்ததாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியது தவறு என கூறியுள்ளார்.