தமிழக செய்திகள்

சென்னையில் இரவு முழுவதும் பெய்த மழை

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்தது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வந்தது.

நேற்று பிற்பகல் வரை நகரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அதன்பிறகு சற்று இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று இரவு வரை பல இடங்களில் நீடித்தது.

குறிப்பாக பெசன்ட்நகர், அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை உள்பட நகரின் முக்கிய இடங்களிலும், புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்பட பல பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

இந்த மழை இன்று (புதன்கிழமை) காலை வரை நீடிக்கும் என்றும், அதன்பிறகு சற்று இடைவெளி விட்டு மீண்டும் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.