கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகமாக இருந்து வந்தது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பெரும்பாலானோர் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலை தற்போதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் திடீரென மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரமே நீடித்தது. அதன்பிறகு மழை இல்லை. இதற்கிடையில் கன்னியாகுமரி முதல் மராட்டியம் வரை தரையில் இருந்து மேலடுக்கு வரை 2 காற்றும் ஒன்றாக சேர்ந்து வருவதால் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
மழை
அதன்படி கடலூரில் நேற்றும் மழை பெய்தது. அதாவது காலை 10.15 மணி அளவில் தொடங்கிய மழை விட்டு, விட்டு பெய்தது. இடையில் வெயில் அடித்த நிலையில், மழையும் ஒரே நேரத்தில் பெய்தது. கடலூர் கூத்தப்பாக்கம், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.
இதேபோல் சேத்தியாத்தோப்பு, வடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.