தமிழக செய்திகள்

ஜெய்பீம் திரைப்பட விவகாரம்; சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

2021 ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அதில் சூர்யா, மணிக்கண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் போன வருட ஆஸ்கார் திரைப்பட விழாவிற்கு தேர்வாகியிருந்தது. ஆனால் விருது கிடைக்கவில்லை.

இப்போது இந்த திரைப்படம் குறித்து ருத்ரா வன்னியர் சேனா என்ற அமைப்பு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ஜெய்பீம் திரைப்படம் தேச ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையிலும், இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அகரம் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்து அதில் படம் எடுத்துள்ளதகாவும் கூறி தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் போஸீசார் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் சூர்யா, ஜோதிகா, ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் மே 20-ந் தேதி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT