தமிழக செய்திகள்

ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற தடைகோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற தடைகோரிய வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து எம்.ஜிஆர் அம்மா தீபா அணி பொதுச் செயலாளர் ஜெ. தீபா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


தீபா மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது பாட்டி சந்தியா போயஸ் கார்டனில் வேதா நிலையம் என்ற வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டில் தான் எனது தந்தை ஜெயராமனும், அத்தை ஜெயலலிதாவும் வசித்தனர். பாட்டியின் மறைவுக்கு பிறகு இந்த வீடு அத்தை ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது.

நானும் எனது தம்பி தீபக்கும் படிப்புக்கு தி.நகர் வீட்டுக்கு குடியேறினோம். இந்த நிலையில் எனது அத்தை ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவருக்கு நானும், எனது தம்பி தீபக்கும்தான் நேரடி வாரிசுகள்.

அத்தை ஜெயலலிதா உயிரோடு இருந்த போது போயஸ் கார்டன், கொடநாடு, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். இந்த சொத்துக்கள் எல்லாம் எனக்கும், தம்பி தீபக்குக்கும்தான் சொந்தம். இந்த நிலையில் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக அரசு அறிவித்துள்ளது.

இதை எதிர்த்து முதல்வர்,தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்தேன். எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. எனவே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் தீபா.

SCROLL FOR NEXT