தமிழக செய்திகள்

ஜெயலலிதா மரணம்: தினகரன், கிருஷ்ண பிரியா, பூங்குன்றன் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தினகரன்,கிருஷ்ண பிரியா, பூங்குன்றனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னை

ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கடந்த 20ந் தேதி வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தது. விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் விதமாக வெற்றிவேல் வீடியோ வெளியிட்டதாக, நீதிபதி ஆறுமுகசாமியின் செயலாளர் பன்னீர்செல்வம் புகார் தெரிவித்தார். தேர்தலுக்கு ஒருநாள் முன்பு, வீடியோவை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி, மோதல் ஏற்பட வெற்றிவேல் வழிவகை செய்துள்ளார் என விசாரணை ஆணையம் தெரிவித்தது.

இப்போது ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணை கமிஷன் அலுவலகத்திற்கு வந்து, வீடியோ பதிவு செய்த சி.டி.யை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்று முக்கியமான 3 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 7 நாட்களுக்கள் ஆவணங்கள், ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT