தமிழக செய்திகள்

வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

ஒட்டன்சத்திரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர் நகையை பறித்து சென்றார்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்த தும்மிச்சம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ராமாத்தாள் (வயது 56). நேற்று முன்தினம் இரவு 2 பேரும், வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது புழுக்கமாக இருந்ததால் வீட்டுக்கதவை திறந்து வைத்தபடி தூங்கியுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, நள்ளிரவில் சுப்பிரமணியின் வீட்டுக்குள் புகுந்தார். அப்போது அங்கு அசந்து தூங்கி கொண்டிருந்த ராமாத்தாளின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை நைசாக பறித்தார்.

இதற்கிடையே திடுக்கிட்டு கண்விழித்த ராமாத்தாள், திருடன், திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் மர்ம ஆசாமி நகையுடன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ராமாத்தாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT