தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் மாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 52). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாயி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதேபோல் மகன், மகள் ஆகியோர் திருமணமாகி வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால் முத்துலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முத்துலட்சுமி, அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது தனது வீட்டில் பீரோவை மட்டும் பூட்டிவிட்டு, வீட்டின் முன்பக்க கதவை பூட்டாமல் சாத்திவிட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், முத்துலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது பீரோவின் பூட்டை உடைத்து, உள்ளே ஒரு கைப்பையில் வைத்திருந்த 26 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதற்கிடையே ரேஷன் பொருட்களை வாங்கி வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி, பீரோவை திறந்து கிடந்ததுடன், நகைகள் வைத்திருந்த கைப்பை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அவர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.