ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே பாலமுருகன் கோவிலில் வெள்ளி வேல், நகை மற்றும் உண்டியல் பணம் திருட்டு போனது.
பாலமுருகன் கோவில்
கெலமங்கலம் அருகே சின்னட்டி சனத்குமார் நதி ஓரத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை பூசாரி வழக்கம்போல் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்த போது முருகனின் 1 கிலோ எடை கொண்ட வெள்ளி வேல் மற்றும் வள்ளி, தெய்வானை கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க நகை திருட்டு போனது தெரிந்தது. மேலும் கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகி ராஜேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் கோவிலுக்கு வந்து பார்வையிட்டார். அப்போது நள்ளிரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டு, உண்டியலை உடைத்து வேல் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து அவர் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.