சென்னை,
கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை நீதிபதி கர்ணன் முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்து, நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால், நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதற்கிடையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன் முன்பு, ஆஜராக கர்ணன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கர்ணனை கைது செய்ய, கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர்.
ஆனால் ஒரு மாதம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த 10ந்தேதி அவரது பதவி காலம் முடிவடைந்தது.
இந்நிலையில் அவர் கோவையில் தங்கியுள்ள தகவல் கொல்கத்தா போலீசாருக்கு உளவு துறையால் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை கோவையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு 12.20 மணியளவில் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர், சென்னை விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்படுகிறார்.
நாளை காலை 11.40க்கு சென்னையிலிருந்து கொல்கத்தா அழைத்து செல்லப்படுகிறார்.