சென்னை,
பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க. என்றும், தி.மு.க.வின் அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வரலாறு தெரிந்து பேச வேண்டும் என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கூறியதால் வரலாற்றை திரும்பி பார்த்தேன். அந்த வரலாற்று துளிகளில் சிலவற்றை கூற விரும்புகிறேன். பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த தி.மு.க.வின் வரலாறு குறித்து பேசலாமா?. இலங்கையில் பல தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள். பிரபாகரன் ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்பதால், புலிகள் என்றாலே புளித்துப்போய்விட்டது என்றும் கருணாநிதி கூறியது உண்மையா இல்லையா?. தமிழீழ தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களவர்களிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி சொன்னது உண்மையா இல்லையா?.
மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைபுலிகளால் ஆபத்து உள்ளது என்றும் அதனால் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டது உண்மையா இல்லையா?. அதனடிப்படையில் தான் இன்றைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருப்பது உண்மையா இல்லையா?. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டி நாடகம் போடும் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?.