தமிழக செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி காலமானார், கண்ணீரில் தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதியின் மரணம் தொண்டர்களை கண்ணீரில் மிதக்க செய்துள்ளது. #Karunanidhi

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவமனையும் உறுதிசெய்தது.

கருணாநிதி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் என்ற தகவல் அறிந்தும் திமுக தொண்டர்கள் மருத்துவமனையை நோக்கி வந்தார்கள். மருத்துவமனையின் முன்னதாக காத்து இருந்து நல்ல செய்தி வருமா? என்ற ஏக்கத்துடனும், சோகத்துடனும் தொண்டர்கள் காணப்பட்டனர். எழுந்து வா தலைவா என்று விண்ணதிர கோஷங்களும் எழுப்பியவண்ணம் இருந்தனர். மாலை 4.30 மணி அளவில் கருணாநிதி உடல்நிலை மிகவும மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியானது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் சோகம் தொற்றிக்கொண்டது. மேலும் தொண்டர்கள் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். தொண்டர்கள் சோகத்தில் எழுந்து வா தலைவா என கோஷம் எழுப்பினர்.

இந்தநிலையில் மாலை 6:10 மணியளவில் கருணாநிதி இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை வெளியானதையடுத்து, மருத்துவமனையில் திரண்டிருந்த தொண்டர்கள் கதறி, கதறி அழுதனர். சில தொண்டர்கள் சாலையில் புரண்டு கதறி துடித்தனர். பெண் தொண்டர்களும் கதறி அழுகின்றனர். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் சிலர் செல்போன் விளக்குகளை விட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி மறைவு செய்தி அக்கட்சியின் தொண்டர்களை கண்ணீரில் மிதக்க செய்துள்ளது.