சென்னை,
கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனும், கர்நாடக மக்களால் செல்லமாக அப்பு என்று அழைக்கப்படுபவருமான புனித் ராஜ்குமார்(வயது 46) தீடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும், அவரது ரசிகர்களுக்கும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில், தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு
இழப்பு ஆகும். பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கியபோதும் எளிமையான மனிதராகவே புனித் ராஜ்குமார் இருந்தார்.
தலைவர் கருணாநிதியின் மறைவுக்குத் தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்க எங்கள் கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது. புனித் ராஜ்குமாரின் மறைவால் கன்னடத் திரையுலகம் தன் மிகச் சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.