திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணியளவில் அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும்.
இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது, சாமி சன்னதி முன்பு அகண்டதீபமும், அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. மகா தீபம் காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மகா தீபத்தை காண பக்தர்கள் மலையேறவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
கார்த்திகை மாதத்துக்கான பவுர்ணமியையொட்டி நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.