சென்னை,
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார், கவர்னரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் வினய், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த ஆனந்தராவ் பாட்டில் சமீபத்தில் மத்திய அரசு பணியில் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கவர்னரின் புதிய செயலாளராக கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிர்லோஷ் குமார், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகள் தெரிந்தவர். தமிழகத்தின் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக கிர்லோஷ் குமார் 2.9.2001 அன்று பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.