ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை போனது.
இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சயானிடம் போலீசார் மறு விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர்.
மேலும் விபத்தில் இறந்த கனகராஜின் (ஜெயலலிதா கார் டிரைவர்) அண்ணன் தனபால் மற்றும் சம்பவத்தன்று கோத்தகிரி, கூடலூரில் பணியில் இருந்த போலீசார், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் விபத்து வழக்கையும், ஆப்ரேட்டர் தினேஷ்குமார் வழக்கையும் மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கனகராஜ் விபத்து வழக்கு, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்துதல், கூட்டுசதி போன்ற பிரிவுகளில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மாற்றம் செய்யப்படும் போது எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றவாளியாக சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கனகராஜ் விபத்து, தினேஷ்குமார் தற்கொலை வழக்குகளை தனிப்படை போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.