சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தி.மு.க சார்பில் முருகனும் போட்டியிட்டனர். கடந்த 2-ந் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார்.
இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும் போட்யிட்டு வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்கள்.
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ என இரண்டு பதவிகளை இருவரும் இருந்தனர். இதில் எந்தப் பதவியை ராஜினாமா செய்வது என்பது தான் பெரும் சிக்கலாக வந்து நின்றது. ஒருவேளை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தால் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும். இதேபோல் எம்.பி பதவியை ராஜினாமா செய்தாலும் 2 மாநிலங்களவை எம்.பி.யை அதிமுக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில், நாளை வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக-வின் முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் இருவரும் எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.