சென்னை,
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இங்கு வசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு சுமார் ரூ.250 கோடி மதிப்பில் 1,900 வீடுகள் கொண்ட 9 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இந்நிலையில் அங்கு அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து காணப்படுவதாகவும், வீட்டு சுவர்கள் தொட்டாலே பெயர்ந்து கொட்டுவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில், புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசைமாற்று வாரியத்தில் கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடத்தின் தரத்தை சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு குழுவினரின் ஆய்வறிக்கையை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-
இந்த கட்டிடம் 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. 864 வீடுகள் இருக்கின்றன. சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்டவுடன் இந்த கட்டிடத்தை கோவிட் சிகிச்சைக்காக மாநகராட்சி பயன்படுத்தியது.
தரமற்ற கட்டுமானம் குறித்து மக்கள் அளித்த புகாரை அடுத்து கட்டிடங்களை ஆய்வு செய்துள்ளோம். பல்வேறு இடங்களில் கழிவுநீர், குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளன. சென்னை ஐஐடி இந்த கட்டுமானம் குறித்து ஆய்வு செய்துவருகிறது. நிபுணர் குழு அறிக்கை கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் சரிசெய்யப்படும்.
ஒப்பந்ததாரரோ, அதிகாரிகளோ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சிதிலமடைந்ததை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.