சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஞான நூலான பகவத் கீதையின் மூலம் வாழ்வின் நெறிமுறைகளை உலகிற்கு எடுத்துரைத்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்லோரை காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன் என்றுரைத்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று, மக்கள் தங்கள் இல்லங்களின் முற்றங்களில் வண்ணக் கோலங்களிட்டு, பழங்கள், இனிப்புகள், பலகாரங்களை இறைவனுக்கு படைத்து, சின்னக் குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை மாவில் நனைத்து, இல்லங்களின் வழி நெடுக பதித்து, ஸ்ரீ கிருஷ்ண பகவானே தங்களது இல்லங்களுக்கு வந்தருளியதாக பாவித்து போற்றி வணங்குவர்.
பகவான் கிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், உலகில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகி, மக்கள் அனைவரும் எல்லா நலன்களோடும், வளங்களோடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.