தர்மபுரி அருகே உள்ள குண்டலப்பட்டியில் சீலக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி நடந்த பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பால் அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு பூர்ணாகுதி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்துக்கு ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து சீலக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.