தமிழக செய்திகள்

விமான நிலையங்களில் மலிவு விலையில் தேநீர், சிற்றுண்டி - எல்.முருகன் தொடங்கி வைத்தார்

பயணிகளின் வசதிகளுக்காக மேம்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் அறிமுக விழா, கோவை விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது.

கோவை,

விமான நிலையங்களில் மலிவு விலையில் தேநீர், சிற்றுண்டி வழங்கும் ‘UDAN யாத்ரி கபே’ துவக்க விழா கோவை விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது. இது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“நமது மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான, விமான நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகளுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி போன்றவற்றை மலிவு விலையில் வழங்குகின்ற, ‘UDAN யாத்ரி கபே’ துவக்க விழா, மகளிர் சுய உதவிக் குழுவின் சார்பில் புவிசார் குறியீடு பெற்ற கோவை கோரா காட்டன் ஆடை விற்பனை அங்காடி, பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்கான சிறிய விளையாட்டு பகுதி மற்றும் பயணிகளுக்கான நூலக வசதி மற்றும் நாட்டின் வெவ்வேறு விமான நிலையங்களில் பயணிகளின் வசதிகளுக்காக மேம்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் அறிமுக விழாவானது, கோவை விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு வருகை தந்த மத்திய விமான போக்குவரத்துத் துறை மந்திரி ராம் மோகன் நாயுடு மற்றும் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி முரளிதர் மொகோல் ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

மேலும் இந்நிகழ்வில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமான போக்குவரத்துத் துறை செயலர் சமீர் குமார் சின்ஹா, இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் விபின் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.