மேச்சேரி:-
மேச்சேரி அருகே மனைவி கண் எதிரே ஏரியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வெல்டிங் தொழிலாளி
மேச்சேரி அருகே புக்கம்பட்டி தாரளகுட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 37). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி கலைவாணி. இந்த தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று கோவிந்தராஜ், தனது மனைவி கலைவாணியுடன் அருகே உள்ள தாரளகுட்டை ஏரிக்கு குளிக்க சென்றார்.
கலைவாணி ஏரிக்கரையில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது ஏரியில் குளிக்க தண்ணீரில் இறங்கிய கோவிந்தராஜ் திடீரென சேற்றில் சிக்கினார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைவாணி சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கோவிந்தராஜ் தனது மனைவி கண் எதிரே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டது.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி கண் எதிரே தொழிலாளி ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.