எலுமிச்சம் பழம்
தமிழகம் முழுவதும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து வரும் நிலையில், ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் உழவர்சந்தையில் தோட்டக்கலை துறை சார்பில், வெளி மார்க்கெட்டை காட்டிலும் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படும் சூழ்நிலையில், எலுமிச்சம் பழம் விலை குறைந்து கிலோ ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டதால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்தனர். கடந்த கோடை காலத்தில் எலுமிச்சம் பழம் கிலோ ரூ.130 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் கவலை
இது குறித்து உழவர்சந்தை அதிகாரிகளிடம் கேட்டபோது, கோடை காலத்தில் 5 முதல் 10 கிலோ வரை மட்டுமே எலுமிச்சம் பழம் விற்பனைக்கு வந்தது. தற்போது நாள்ஒன்றுக்கு 100 கிலோ வரை விற்பனைக்கு வருகிறது. இதுவே விலை குறைய காரணம் என்றனர். சிதோஷ்ணநிலை மாறுபாட்டால் எலுமிச்சம் பழத்தின் தேவை குறைந்து இருப்பதும் விலை குறைய காரணம் என சொல்லப்படுகிறது. எலுமிச்சம் பழம் விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கோடை காலத்தில் விளைச்சல் இல்லை. அப்போது விலை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது விளைச்சல் இருக்கிறது. போதிய விலை கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தனர்.