சென்னை,
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது குறித்து மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. அதன்படி சென்னை வந்த மத்திய குழுவினர் நேற்று ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள அத்திப்பட்டு கொரோனா சிகிச்சை மையம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து மத்திய குழுவினருக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.
இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:-
கொரோனா தடுப்பூசியை பொருத்தவரை சுகாதாரப் பணியாளர்கள் 75 சதவீதம் பேர் போட்டுள்ளனர். அதேபோல் முன்கள பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றனர். முதியோர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் நல்ல வரவேற்பு உள்ளது.
சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 39 ஆயிரம் தெருக்களில், ஆயிரம் தெருக்களில் தான் தொடர்ந்து, 5 முதல் 6 பேருக்கு பாதிப்பு இருந்து வருகிறது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூரிலும் தொற்று குறையாமல், தொடர்ந்து பாதிப்பு இருந்து வருகிறது.
இதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தியத்தில், குடும்ப நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொள்பவர்கள், முக கவசம் அணியாதவர்களிடையே தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பஸ்சில் பயணம் செய்பவர்கள், ஓட்டல்கள், புத்தக கண்காட்சியில் கூட பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை.
அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது, முடிந்தவரையில் சமூக இடைவெளிவிட்டு தள்ளி நிற்க வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.