கிருஷ்ணகிரி
ஆடு மேய்க்கும் பண்ணை கழுத்து அறுத்து கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஆடு மேய்க்கும் தொழிலாளி
கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு, தண்ணீர்பள்ளத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40) கணவரை பிரிந்து கடந்த, 16 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் துரை (50) இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள். கடந்த, 2022-ம் ஆண்டு ஜூன், 8-ந் தேதி பெரிய கல்குந்து மலைப்பகுதியில் இவர்கள் ஆடு மேய்த்துள்ளனர். அப்போது பர்கூர், நக்கல்பட்டி இருளர் காலனியை சேர்ந்த தொழிலாளி திம்மராஜ் (36) அங்கு வந்துள்ளார்.
மது போதையில் இருந்த அவர் லட்சுமி, துரை ஆகியோருடன் அமர்ந்து உணவு அருந்தியுள்ளார். பின்னர், லட்சுமியும், துரையும் தனித்தனியாக ஆடு மேய்க்க சென்றுள்ளனர். அப்போது, திம்மராஜ், லட்சுமியை தேடிச்சென்று அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவரது ஆசைக்கு இணங்காத லட்சுமியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அவர் தப்பி சென்றார்.
ஆயுள் தண்டனை
இவரது அலறல் சத்தம் கேட்டு துரை வந்து பார்த்த போது, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் லட்சுமி இறந்துகிடந்தார். கந்திக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து திம்மராஜை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட திம்மராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.