தமிழக செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

பா.ஜனதா அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்துள்ளார். காங்கிரஸ் நேரிடையாக சென்று குடியரசு தலைவரிடம் முறையிட்டு, இந்த சட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. எனினும், இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் நலனை காக்க ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. மத்திய அரசின் சட்ட வரம்புக்குள் தலையிடாமல், மாநில வரம்புக்குட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளது. அவசர சட்டங்களாகவே இருக்கும் மத்திய சட்டப்பிரிவுகள் சிலவற்றை ரத்து செய்தும் ராஜஸ்தான் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சட்டம் அல்லது துணைச் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டத்தை காங்கிரஸ் ஆளும் இதர மாநில அரசுகள் பயன்படுத்தினால், மத்திய அரசின் பாதகமான சட்டங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஆலோசனையைத் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும் ஏற்று, ராஜஸ்தானைப் போல், மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT