தமிழக செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு 13-ந் தேதி வெளியாகும்: அமைச்சர் தா.மோ அன்பரசன்

சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூரில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சியில், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, தி.மு.க. பதவியேற்று கடந்த 3 மாதங்களாக எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி வருகிற 13-ந் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும், சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும் என கேட்டுகொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, பம்மல் முன்னாள் நகரமன்ற தலைவர் வே.கருணாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.