தமிழக செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 798 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 798 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நீதிபதிகள் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 1741 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின் முடிவில் 798 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து 17 ஆயிரத்து 366 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குதாரர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT