தமிழக செய்திகள்

மதுரை: கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி

மதுரையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

மதுரை,

கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் நேற்று இரவு காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர். திருமங்கலம் - விருதுநகர் நான்குவழிச்சாலையில் சென்றபோது கள்ளிக்குடி விளக்கு பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி பறந்து சென்று சாலையின் மறுபக்கத்தில் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் தேங்கன்குழிவிளையை சேர்ந்த சம் டேவிட்சன், மார்ட்டின், கமலநேசன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர் செல்வகுமார் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரில் பயணித்த 3 பேரும் ஒரேகுடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.