சேலம்,
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி ஆத்துக்காட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43), டேங்கர் லாரி டிரைவர். இவருடைய மனைவி சாந்தி (32). இவர்களின் மகள் ரம்யா லோஷினி(19). திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து இருந்தார்.
மகன் தீனதயாளன்(17). 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளான். நேற்று முன்தினம் இரவு, தீனதயாளனை அவனது பெற்றோர் இன்று ஒரு நாள் மட்டும் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குமாறு கூறி உள்ளனர். உடனே அவனும் தனது பாட்டி வீட்டுக்கு சென்று தூங்கினான். பின்னர் நேற்று காலையில் அவன் பாட்டி வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு வந்தான்.
வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கவே தீனதயாளன் சத்தம் போட்டு அழைத்தும் கதவு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவன் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தான். அப்போது தனது பெற்றோரும், அக்காளும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.
உடனே அவன், அம்மா, அப்பா, அக்கா என்று கூச்சல் போட்டு கதறவே, அருகில் வசிப்பவர்கள் அங்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தனர். அங்கு ராஜ்குமார் சேலையாலும், சாந்தியும், ரம்யா லோஷினியும் நைலான் கயிற்றாலும் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டு இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.