கடலூர் முதுநகர்,
வங்ககடலில் இலங்கைக்கு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தொவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது வங்க கடலில், நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
600 கிலோ மீட்டர் தொலைவில்...
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தெற்கே, தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.