மதுரை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
திமுக ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும் என தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்றிட உறுதி ஏற்று தேர்தல் நாளுக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் களம் காணும் டாக்டர் சரவணன் அவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
தூங்கா நகரத்தை தூய்மையில்லாத நகரமாக மாற்றி அவலநிலையில் வைத்துள்ளது திமுக அரசு. ரூ.200 கோடி ஊழல் செய்து ராஜினாமா செய்த மேயரும், ஊழலுக்கு பெயர் போன அமைச்சர் மூர்த்தியும் மதுரைக்கு கிடைத்திருப்பது சாபக்கேடு. இந்த ஊழல் கும்பலின் பிடியில் இருந்து மதுரை மாநகரை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழகத்தின் எப்போதும் அரசியல் மாற்றத்திற்கு அடித்தளமிடுவது மதுரை மாநகரம் தான். இந்த முறையும் தீயசக்தி திமுகவை விரட்டியடித்து தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவதற்கும் மதுரை மாநகரம் அடித்தளம் அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மதுரை மாநகரம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும், குப்பைமயமாக மாறியிருக்கும் மதுரையை மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் மதுரை மக்கள் நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் மதுரை வடக்கு தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் சரவணனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கப்போவது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! மதுரை மாநகரம் வளரட்டும்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.