மதுரை,
திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை 9-ந்தேதி (இன்று) முதல் தொடங்குவதாக அறிவித்து உள்ளனர். இந்த போராட்டம் சட்டவிரோதமானது. இதனால் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்.
அதுமட்டுமல்லாமல் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் நேற்று நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு முறையிட்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவரது வழக்கை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டனர். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.