தமிழக செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் சேட்டு என்பவரின் பெட்டிக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரணி தாலுகா போலீசார் சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சேட்டுவை கைது செய்தனர்.

இந்த நிலையில் சேட்டுவின் கடைக்கு காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவர் வாரந்தோறும் சனிக்கிழமை மிக்சர், சிப்ஸ் போன்ற பொருட்களை கைப்பையில் கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார். அதனுடன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று விற்பனை செய்த பொருட்களுக்கு பணம் பெறுவதற்காக வந்த சாமுவேலை ஆரணி தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT