தமிழக செய்திகள்

பெண் தோழியுடன் மது அருந்திவிட்டு காரை ஓட்டிய வாலிபர் - 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

மதுபோதையில் காரை ஓட்டிய பிரசாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை,

சென்னை அடுத்த கொளத்தூரை சேர்ந்த பிரசாந்த் என்பவர், நேற்று இரவு 8 மணியளவில் அண்ணா நகர் பகுதியில் தனது காரில் அமர்ந்து கொண்டு பெண் தோழியுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் மதுபோதையில் காரை ஓட்டத் தொடங்கிய பிரசாந்த், பின்புறம் பார்க்காமல் ரிவர்ஸ் எடுத்தபோது பின்னால் வந்த ஒரு காரின் மீது பிரசாந்தின் கார் மோதியது.

இதைத் தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்திற்குள்ளானது. அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 3 கார்களில் இருந்தவர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மதுபோதையில் காரை ஓட்டிய பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரது காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.