ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் ஹாஜா முகமது(வயது 40). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தன்வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாஜா முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திரா, 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஹாஜா முகமதுவிற்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனையும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி சுபத்திரா பரிந்துரை செய்துள்ளார்.
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளது.