சென்னை,
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மழை பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் இதனால் மருத்துவக் கல்லூரியின் இடங்கள் 9150 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், நீட் மசோதா தொடர்பாக ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாளை சனிக்கிழமையன்று தமிழகத்தில் 5000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட இருப்பதாக கூறினார். சென்னையில் மட்டும் 750 இடங்களில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.