சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேரும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முறைப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிக்கிறார்.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர். அண்ணா அறிவாலயம் முன்பாக ஏராளமான தொண்டர்களும் குவிந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை தொண்டர்கள் வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் அங்கு டெலிவிஷன்கள் வைக்கப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெறும் என்று தெரிகிறது.
இன்று நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் முதலில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை பொதுச்செயலாளர் அறிவிப்பார். திமுக தலைவராக மு.க ஸ்டாலினும், பொருளாளராக துரை முருகனும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுகின்றனர்.