சென்னை,
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், வாழ்க்கை என்ற பயணத்தில் பலர் வருவர், பலர் போவர். எனினும் சிலர் மட்டுமே நிலைத்து நிற்பர். அந்த வரிசையில் முதல்-அமைச்சராக நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தமிழகத்திற்கு அகதியாக வந்து தன் குடும்பத்திற்காக உழைத்து வெள்ளை உள்ளம் மற்றும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர், தனக்காக என்றும் வாழ்ந்ததில்லை. தன் திறமை மற்றும் உழைப்பால் பாடுபட்டு சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்தார்.
அவருக்கு இணையான கொடை வள்ளல் யாரும் உண்டோ? எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பொற்கால ஆட்சி நடத்தினர். அந்த ஆட்சியை விரைவில் நிலைநாட்ட வேண்டும் என்று சூளுரைக்க வேண்டிய நாள் தான் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள். இது தான் கட்சியினருடன் இந்நாளில் நாங்கள் தெரிவிக்கும் செய்தி மற்றும் வேண்டுகோள். தமிழ்நாட்டை காப்பதற்கு தன்னல ஆட்சியை நீக்குவோம். கோட்டையில் நம் கொடி பறக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.