சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தென்னிந்திய ஸ்பின்னிங் மில் சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள வழக்கில், கொரோனா ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக அனைத்து மில்களும் மூடப்பட்டு உள்ளது. தொழிலாளர்களும் வேலைக்கு வருவதில்லை. அனைத்து நிதி நடவடிக்கைகளும் முடங்கிப்போய் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உயர் அழுத்த மின் கட்டணத்தை முழுமையாக செலுத்தும் படி நிர்ப்பந்திக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். குறைந்த பட்ச உயர்மின் அழுத்தத்திற்கான 20 சதவீதத்தை மட்டும் கட்டணமாக வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல உயர் மின் அழுத்தம் பயன்படுத்தக்கூடிய மற்ற தொழில் நிறுவனங்கள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளிடம் இருந்து ஊரடங்கு முடியும் வரை குறைந்தபட்ச கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.