தமிழக செய்திகள்

299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

நெறிக்குறவர்கள் உள்ளிட்ட 299 பயனாளிகளுக்கு இன்று இலவச வீட்டுமனை பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற விழாக்களில் 158 நெறிக்குறவர் பிரிவு பயனாளிகள் உட்பட்ட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மக்கள் நலனுக்காக எண்ணற்ற அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள பழங்குடியினர் சமூக மக்களான நெறிக்குறவர்கள் நலனுக்காக குடியிருப்பு, வீட்டுமனை பட்டா வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை அருகே உள்ள கோட்டூர்புரம் பகுதியில் 158 நெறிக்குறவர் குடும்பமாக வசித்து வருகிறார்கள். கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது நரிக்குறவர் என்று அழைப்பது கண்ணியக் குறைவு என்று கருதி அவர்கள் நெறி தவறாதவர்கள். நெறிக்குறவர்கள் என்று குறிப்பிட்டார். 1980-ம் ஆண்டு இப்பகுதி நெறிக்குறவர் மக்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல இப்பகுதியில் குடிசை வீடுகளாக இருந்த சமயத்தில் அடிக்கடி தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்ட காரணத்தினால் குடிசை வீடுகளுக்கு மாற்றாக ஹாஸ்பெடாஸ் ஓடுகள் பதித்த வீடுகளாக கட்டி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Also read:கவர்னர் காரை போதையில் பின்தொடர்ந்த வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்

தற்போது, கோட்டூர்புரம், ஜிப்ஸ் காலனி பகுதியில் உள்ள நெறிக்குறவர் மக்களுக்கு நிரந்தர இருப்பிடம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் 158 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடமாகும். முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின் மூலம் உரிய தடையின்மைச் சான்று பெறப்பட்டு 18 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் இப்பகுதி மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.