தமிழக செய்திகள்

பழனியில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி

ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பல பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் விவசாயத்துடன் ஆடு, மாடு வளர்ப்பையும் தொழிலாக செய்து வருகிறார்.

இந்த நிலையில், சக்திவேல் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று கன்று ஈனுவதற்கு சிரமப்பட்ட நிலையில் கால்நடை மருத்துவருக்கு சக்திவேல் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக வண்ணப்பட்டி கால்நடை மருத்துவமனை மருத்துவ உதவியாளர் விரைந்து வந்து பசு மாட்டிற்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தார்.

சிறிது நேரத்தில் பசுமாடு கன்று குட்டியை ஈன்றது. அப்போதுதான் குடும்பத்தினருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பிறந்த அந்த கன்றுகுட்டி மற்ற குட்டிகள் போல இல்லாமல் முன்கால் பகுதியின் மேல் பகுதியில் இரண்டு கால்கள் என 6 கால்கள் இருந்தது. ஆறு கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதி கிராம மக்கள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

மரபணு குறைபாடு காரணமாக இதுபோன்று சில சமயங்களில் கன்றுகள் பிறப்பதாக பழனி கால்நடைதுறை உதவி இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT