சென்னை,
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடர்கிறது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் கன்னியாகுமரி மழை பாதிப்புகள் குறித்து சென்னை தலைமைசெயகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கன்னியாகுமரியில் மழை பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் மக்களுக்கு வழங்கப்பட உள்ள நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனையில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் பங்கேற்ற்றுள்ளனர்.