தமிழக செய்திகள்

ரூ.36.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.3.2026) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 25 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவிலான முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 6 மேம்படுத்தப்பட்ட பள்ளிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பெரம்பூரில் 8 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்

கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கார்த்திகேயன் சாலையில் 68 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையக் கட்டடம், ஜி.கே.எம். காலனி 29வது தெருவில் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையக் கட்டடம், வ.உ.சி. தெருவில் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடம், புளியந்தோப்பு, போகிபாளையத்தில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை உருது துவக்கப் பள்ளி கட்டடம், அயனாவரம், மதுரை தெருவில் 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக் கட்டடம், மதுரை சாமி மடம் சாலையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடல், பேப்பர் மில்ஸ் சாலையில் 36 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட உசைன் பூங்கா, பல்லவன் சாலையில் 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக் கட்டடம், பெரம்பூர் நெடுஞ்சாலை தெருவில் முரசொலி மாறன் பூங்காவில் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா;

நகர்ப்புற வீடட்றோருக்கு தேவராஜ் தெருவில் 72 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரவுக் காப்பகம் மற்றும் சிவா ராவ் சாலையில் 72 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரவுக் காப்பகம், குட்டி தம்புரான் தெருவில் 72 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரவுக் காப்பகம், புளியந்தோப்பு நரசிம்ம நகரில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தல்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் வீனஸ் தியேட்டர் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 7 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த ஒருங்கிணைந்த கட்டடம் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 17,399 சதுர அடி கட்டட பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரை தளத்தில் நூலகம், இ-சேவை மையம், கழிப்பறைகள், முதல் தளத்தில் மண்டல அலுவலகம், செயற் பொறியாளர்கள் மற்றும் துணை செயற் பொறியாளர்கள் அலுவலகங்கள், நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகம், கூட்ட அரங்கம், பொறியாளர்கள் பிரிவு, இரண்டாம் தளத்தில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, தேர்தல் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்படும்.

தந்தை பெரியார் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தல்

திரு.வி.க. நகர் மண்டலம், ஓட்டேரி, செல்லப்பா தெருவில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இப்புதிய ஆரம்ப சுகாதார நிலையம் தரை மற்றும் முதல் தளத்துடன் 6300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் புறநோயாளிகள் வருகை பதிவு செய்யும் இடம், அவசர சிகிச்சை அறை, மருத்துவ அலுவலர் அறை, கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனை அறை, தடுப்பூசி அறை, ஆய்வக மாதிரி சேமிப்பு அறை, மருந்தகம், தொற்றா நோய்கள் பரிசோதனை அறை, முதல் தளத்தில் கர்பப்பை பரிசோதனை, காசநோய் பரிசோதனை, மருந்து கிடங்கு, மருத்துவ ஆலோசனை அறை, ஆய்வக பொருள் கிடங்கு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சுமார் 49,500 மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக வெங்கடம்மாள் சமாதி தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, கார்ப்பரேஷன் லேன், எஸ்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவர்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மொத்தம் 25 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் திறந்து வைத்தார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் கன்னிகாபுரம், வெங்கடேசபுரம், புளியந்தோப்பு, ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 6 மேம்படுத்தப்பட்ட தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல்

கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கினார்.

பெரம்பூர் புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் திறந்து வைத்தல்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பெரம்பூரில் 8 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இப்புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 17,780 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைத் தளத்தில் வாகன நிறுத்துமிடம், மின்தூக்கிகள், கழிப்பறைகள், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களில் தாசில்தார் அறைகள், நிர்வாக அலுவலகங்கள், நான்காவது தளத்தில் பதிவேடு அறை, கூட்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

பேப்பர் மில்ஸ் சாலையிலுள்ள எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 4,444 கழக நிர்வாகிகளுக்கு தோல் பை, நோட்டுப் புத்தகம் மற்றும் பேனா ஆகியவற்றை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கினார்.

பெரம்பூர், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் 8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பயிற்சி முடித்த 5,000 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆர். கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், ஆர். மூர்த்தி, துணை மேயர் மு. மகேஷ் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி, மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர்/இயக்குநர் இ.சா.பர்வீன் சுல்தானா, பெரியார் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கே. ஹேமலதா, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாகிகள் நரேந்திரன், ஹெலன், டான் பாஸ்கோ பள்ளி தாளாளர் அருட்தந்தை லியோ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.