சென்னை,
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.02.2026) கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சார்ந்த 2,007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்களை வழங்கினார். மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1.61 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள "குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தம்" மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 40.59 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலையோரப் பூங்கா, 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 அமுதம் நியாய விலைக் கடைகள் மற்றும் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன பயணியர் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2,007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்
சென்னை, பெரம்பூர், டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கண்ணகி நகர், அம்பேத்கர் நகர், கங்கை அம்மன் கோவில், இந்திரா நகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காமராஜர் நகர், மக்காரம் தோட்டம், ஜி.கே.எம். காலனி ஆகிய திட்டங்களின் மூலம் 1,969 பயனாளிகளுக்கும், அரசாணை எண்.97ன் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கும், என மொத்தம் 2,007 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தம்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலை, ரெட்டேரி சந்திப்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1.61 கோடி ரூபாய் செலவில் 1,546 சதுரடி கட்டடப் பரப்பளவில் 54 இருக்கைகள் கொண்ட காத்திருப்புக் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கருவிகள் (CCTV Cameras), நவீன கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தத்தை முதல்-அமைச்சர் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலையில், 40.59 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை, இருக்கை வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் (CCTV Cameras), வாகனம் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள "சாலையோரப் பூங்கா",
திரு.வி.க. நகர் மண்டலம், பேப்பர் மில்ஸ் சாலை, ராஜாத்தோட்டம் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பிற்கு அருகில் மூலதன நிதியின் கீழ் 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 அமுதம் நியாய விலைக்கடைகள் மற்றும் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடம்,
திரு.வி.க. நகர் மண்டலம், ரெட்டேரி சந்திப்பில் 25 லட்சம் ரூபாய் செலவில் 30 பயணிகள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள், ACP கூரை, மின்விசிறிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன பயணியர் நிழற்குடை என மொத்தம் 1 கோடியே 75 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் முடிவுற்ற பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.