சென்னை
குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 வழக்குரைஞர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் பெருநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை நடத்துவர். அத்துடன் அவர்கள் மாற்று பணியில் பல்வேறு அரசு துறைகளில் சட்ட ஆலோசகர்களாக பணிபுரிவர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2ல் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல்நிலை தேர்வு, முதன்மைத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றிற்கு பின் அப்பணியிடத்திற்கு 45 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமை செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., குற்ற வழக்கு தொடர்வு துறை இயக்குநர் ஜி. கிருஷ்ணராஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.